மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிக்கை

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய, மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-25 06:25 GMT

ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக,  கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில்,  ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக,  64-ம் ஆண்டு கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

திட்டத் தலைவர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். திட்டச் செயலாளர் வி.சண்முகம் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.மூர்த்தி,  கல்வெட்டை திறந்து வைத்து, கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் எஸ்.ராமசுப்பிரமணியம், மாநில இணைச் செயலாளர்கள் வி.ராஜேந்திரன், கே.சம்பத், எம்.தனசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில், சம்மேளனத்தின் 64 ஆண்டு சிறப்புகள், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பேசப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்த வாரியம் நேரடியாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும். போனஸ் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியூசி கைத்தறி மாநில சம்மேளன செயலாளர் சித்தையன், நிர்வாகி வி.பி.வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News