குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வருத்தம் தெரிவித்த தலைமை டாக்டர்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உதாசீனப்படுத்தியதால் மனமுடைந்தவரிடம் தலைமை டாக்டர் வருத்தம் தெரிவித்தார்.

Update: 2022-01-14 03:14 GMT

குமாரபாளையம் அரசு மருத்துவமனை.

குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் சவுந்தர், 22. இவர் தனக்கு சளி, இருமல் இருந்ததால் சில நாட்கள் முன்பு குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு சென்றுள்ளார். இதற்கு முன்பாக நீர் கட்டு பாதிப்பு ஏற்பட்டதால் கால் மற்றும் கையில் கட்டு கட்டி இருந்துள்ளார்.

டாக்டரிடம் சென்று சளி, இருமலுக்கு சிகிச்சை செய்ய கேட்க, இந்த கட்டு கட்டின இடத்திற்கே போக வேண்டியதுதானே? இங்கு எதுக்கு வந்தீங்க? என்று ஏளனமாக கேட்டதுடன், அருகில் இருந்த நபரிடம் கிண்டலாக இது பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுந்தர் வெளியில் வந்து, இது குறித்து சமூக வலை தளங்களில் தான் பேசிய ஆடியோவை பரப்பினார்.

இந்த ஆடியோ குறித்து ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதியிடம் கேட்டபோது, இது பற்றி சம்பந்தப்பட்ட டாக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். நேற்று விசாரணைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு சவுந்தர் அழைக்கப்பட்டார்.

இது பற்றி சவுந்தர் கூறுகையில், இனி இது போல் நடக்காது என தலைமை டாக்டர் கூறினார். என்னால் கொடுக்கப்பட்ட புகாருக்கு நான் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டேன். உதாசீனப்படுத்திய டாக்டர் என்னிடம் நடந்து கொண்டது குறித்து சொன்னேன். இந்த விசாரணை குறித்து எழுதி தர சொன்னார்கள். எழுதி கொடுத்தேன் என்றார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நகர அமைப்பாளர்கள் சித்ரா, உஷா கூறுகையில், இது போன்ற டாக்டர்களால், பல செவிலியர்களால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை அதிகரித்து வருகிறது. ஏழை மக்கள் வைத்தியம் செய்ய அரசு மருத்துவமனையைத்தான் நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட டாக்டர் இந்த விசாரனைக்கு அழைக்கப்படவில்லை. தலைமை டாக்டர்தான் வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கு இது போல் உதாசீனப்படுத்தினால் எங்கு போவார்கள்? மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மருத்துவமனை முன்பு மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News