குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
சுற்றுலா வந்த மாணவர்கள் கார் குமாரபாளையம் அருகே கவிழ்ந்ததில் மாணவர் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.;
குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை பல்லக்காபாளையம் அருகே வேகமாக வந்த மாருதி ஷிப்ட் கார் நிலை தடுமாறி டிவைடர் மீது மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 7 பேர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (22) வழியில் இறந்தார்.
இது பற்றி போலீசார் கூறியதாவது: இறந்த நவநீதகிருஷ்ணன் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு கரூரை சேர்ந்த மாணவன் நந்தகுமார் (22) என்பவரது காரில் அவர் ஓட்ட, பென்னாகரம், லட்சுமணன் (21), ஊத்தங்கரை, கோவர்த்தனன் (22), பென்னாகரம், சந்துரு (22), சங்ககிரி, மோகன் சங்கர் (23), பாலக்கோடு, சபரி (21), ஆகியோர் உடன் வந்தனர். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவர்கள் 6 பேர்களும் பலத்த காயமடைந்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.