பள்ளிபாளையம் அருகே தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை

பள்ளிபாளையம் அருகே கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வந்த மூதாட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-05-13 15:45 GMT

கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்.

பள்ளிபாளையம் அருகே கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வந்த மூதாட்டி மர்ம நபர்களால் கொலை செய்யபட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது55.) கணவர் இறந்து விட்ட  நிலையில் பழனியம்மாள் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சல் செய்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவர் மூதாட்டி பழனியம்மாளை பார்க்க  அவரது வீட்டிற்கு சென்றபோது மூதாட்டி நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி  பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் மற்றும் திருச்செங்கோடு டி.எஸ்.பி மகாலட்சுமி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினார்கள். மூதாட்டி பழனியம்மாள் காது அறுக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதால் நகைக்காக இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு மற்றும் ஆட்டுக்கொட்டகையில் இருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் செபி வரவழைக்கப்பட்டு கொலை நிகழ்ந்த இடத்தில் மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதனை தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி மூதாட்டி கொலையில் துப்பு துலக்க  தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கடந்த மாதம் தனிமையில் இருந்த மூதாட்டி கரும்புக்காட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், கால்நடைகளை மேய்ச்சல் செய்து தனிமையில் வசித்து வரும் மூதாட்டி பழனியம்மாள் கொலை செய்யப்பட்டதற்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி வருகின்றனர்

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் தனிமையில் உள்ள மூதாட்டிகள் கொலை செய்யபட்டு வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் முதியோர் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யும் வகையில் தனிமையில் உள்ள முதியோருக்கான போலீசார் தனிபிரிவை காவல்துறை அமுல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து தனிமையில் வசித்து வரும் மூதாட்டிகள் கொலை சம்பவம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News