விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
குமாரபாளையம் நீதிமன்றத்தில் விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நீதிமன்றத்தில் விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விலங்குகள் வதைத்தடுப்பு எஸ்.ஐ. தர்மராஜன், சேலம் கோவை புறவழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விலங்குகளை ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தார்.
லாரியில் சட்டத்திற்கு புறம்பாக பட்டினி, தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் எருமைகளை ஏற்றி துன்புறுத்தல் செய்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பொள்ளாச்சி சுரேஸ், 32, சேலம் மதன்குமார், 28, ஒட்டன் சத்திரம் சுரேஸ், 31, ஆந்திர மாநிலம் சித்தூர் ரியாஸ், 27, கேரளா பாலக்காடு அபுதவ்யா, 33 ஆகிய 5 பேரை எஸ்.ஐ. தர்மராஜன் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சப்னா , விலங்குகளை துன்புறுத்தல் செய்தமைக்காக 5 பேருக்கும் சேர்த்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.