வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு கத்திகுத்து

Update: 2021-03-13 11:30 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீடு புகுந்து கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள விட்டலபுரியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் ராஜா. இவரது ஜவுளி நிறுவனத்தில் பெரியார் நகரை சேர்ந்த இளைஞர் பிரதீப் என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பிரதீப், உரிமையாளரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனியாக வீட்டில் இருந்த, தனியார் கல்லூரியில் படிக்கும் ராஜாவின் மகள் கோகிலவாணியிடம் ஒரு காகிதத்தினை கொடுப்பது போல் நடித்து அந்த காகிதத்தினை கீழே தவறவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த காகிதத்தை எடுக்க கோகிலவாணி கீழே குனிந்த பொழுது பிரதீப், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கோகிலவாணி உடம்பின் பல இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். கோகிலவாணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டினர், ராஜாவின் வீட்டின் உள்ளே இருந்து வெளியே ஓடிய பிரதீப்பை துரத்தி சென்ற இளைஞர்கள் அவனை பிடித்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோகிலவாணி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News