மாசிலா அருவிக்கு செல்லும் சாலை சீரமைக்க கோரிக்கை
மாசிலா அருவிக்கு செல்லும் பாதையில் வழியில் பேரழிவு, சாலை சீரமைக்க கோரிக்கை;
மாசிலா அருவி சாலை சரி செய்யப்படுமா
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. மூலிகைகள் நிறைந்த இந்த மலையில், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு அடுத்தப்படியாக மாசிலா அருவி அமைந்துள்ளது. ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்குச் செல்ல 1,500 செங்குத்தான படிக்கட்டுகள் உள்ளதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்லாமல், மாசிலா அருவியில் குளித்து செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், மாசிலா அருவிக்குச் செல்ல சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருவிக்குச் செல்லும் நுழைவாயில் முதல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக ஜல்லிக் கற்கள் கொட்டிவைக்கப்பட்டுள்ளதால், இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மாசிலா அருவிக்கு தினமும் ஏராளமானோர் வெளியூரிலிருந்து வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார் சாலை இதுவரை சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக மாறி ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, ஒன்றிய நிர்வாகம் இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.