மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.;
எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி சிவரஞ்சனி- வசந்தகுமார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பனங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி பட்டதாரி. அவரது உறவினர் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் சிவரஞ்சனியும் வசந்தகுமாரும் கடந்த 6ஆம்தேதி வீட்டைவிட்டு வெளியேறி ஆடுதுறை கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பெண்வீட்டாரின் கடத்தல் புகாரின் பேரில் போலீசார் வசந்தகுமார் குடும்பத்தினரை மிரட்டல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே இன்று காதல்ஜோடி இருவரும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா அவர்களிடம் ஆஜர் ஆகி நாங்கள் இருவரும் விருப்பத்தின்பேரில் சென்று திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர். இருவரையும் விசாரணை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேசி எழுதிக்கொடுத்துவிட்டு செல்ல உத்தரவிட்டார்.