நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டம்

தினக்கூலி ரூ. 420 -ஆக உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ரூ.400 வழங்க ஒப்புக்கொள்ளப் பட்டது

Update: 2021-08-24 11:48 GMT

சீர்காழி நகராட்சியில் ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுத்தொழிலாளர்கள்  

சீர்காழி நகராட்சியில் ஊதிய உயர்வு கோரி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அலுவலக நுழை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் 70 -க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். நகரில் உள்ள 24 வார்டுகளில் குப்பையை சேகரிப்பது மற்றும் அவற்றை தரம் பிரித்து உரமாக்குவது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர்.

இதற்காக நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் ஊதியமாக வழங்கபட்டு வருகிறது. இதனை 420 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, நகராட்சி அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News