சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: புகார் அளித்த பெற்றோருக்கு கத்திகுத்து

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெற்றோருக்கு கத்திகுத்து.

Update: 2021-07-16 05:45 GMT

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (60). பாஜக பிரமுகரான இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தின் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி ராஜலட்சுமி அளித்த புகாரில் சிறுமியின் தந்தைக்கும், தங்களுக்கும் போக்கியத்திற்கு இடம் வாங்கியது தொடர்பாக பணப்பிரச்சனை உள்ளதாகவும் பணத்திற்காக வேண்டுமென்றே பொய்புகார் அளித்துள்ளதாகவும் உரிய விசாரணை செய்யாமல் போலீசார் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் புகார் அளித்த சிறுமியின் பெற்றோர்(பாண்டியராஜன்) வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் பாஜக பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மகாலிங்கத்தின் 2மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து வழிமறித்து கத்தி மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர்.

தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர் தரப்பை சேர்ந்த ஒருவரையும் (சத்தியராஜ்) கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாலியல் புகார் அளித்ததற்காக கொலைமிரட்டல் விடுத்து வந்த நிலையில் பாஜக பிரமுகர் மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் தங்களை தாக்கி கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜவகர் சுதாகர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்த பெற்றோர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News