மயிலாடுதுறை அருகே சிமெண்ட் மூட்டையில் மணல் கடத்தும் இளைஞர்கள்

மயிலாடுதுறை அருகே சிமெண்ட் மூட்டையில் வைத்து நூதன முறையில் மணல் கடத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-16 16:30 GMT

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞர்களை கைது செய்த போலீசார்.

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டை அடுத்த கொள்ளிடம் ஆற்றில், கடந்த 30 ஆண்டுகளாக அரசு மணற்குவாரிகள் அமைத்து ஆற்று மணல் அள்ளப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மணல்குவாரிகள் செயல்படாத சூழலில் இப்பகுதியில் இரவு வேளையில் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளிலும் மணல் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்தது. இந்நிலையில் காவல்துறையினரின் கடும் கட்டுப்பாட்டால் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது.

இருப்பினும் ஆற்று மணல் தான் கட்டுமானத்திற்கு சிறந்தது என செல்லப்படுவதால் அதனை அதிக விலைக்கொடுத்தும் வாங்கி வீடுக்கட்ட பொதுமக்கள் பலரும் முனைப்பு காட்டுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பணத்திற்காக கொள்ளிடக்கரையோரம் உள்ள இளைஞர்கள் நூதன முறையில் தங்களது இருசக்கர வாகனத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணலை அள்ளிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் சிமென்ட் சாக்குகள் மூலம், கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணலை திருடி விற்பனை செய்து வருகின்றர். 80 மணல் மூட்டை ஒரு யூனிட் என கணக்கிடப்பட்டு, ஒருமுறை பைக்கில் 4 மூட்டைகளைக் கடத்தி கொண்டு போய் உரியவரிடம் சேர்ப்பார்கள். இதுபோன்று 80 சாக்கு பைகளில் ஒரு யூனிட் மணல் கடத்தி 8000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனிடையே மணல்மேடு காவல்துறையினருக்கு இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விராலூர் பகுதி வழியாக சென்ற பைக்களை நிறுத்தி சோதனை ஈடுப்பட்டனர். அப்போது சிமெண்ட் சாக்குகளில் மணல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 10 பைக்களுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News