மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும் அபாயம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-20 16:30 GMT

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்ட நிலையில் எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மயிலாடுதுறை மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இதனால் ஏற்கெனவே செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், செவிலியர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக் கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் கோரியும் செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து செவிலியர்கள் பணியை தொடர்ந்தனர்.

Tags:    

Similar News