நிவாரணப் பொருட்களை வழங்கி முன்னுதாரணமாக திகழும் வளர் பரஸ்பர உதவி அறக்கட்டளை

Update: 2021-07-21 15:15 GMT

வளர் பரஸ்பர உதவி அறக்கட்டளை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நுண்கடன் நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றுள்ள பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா காலத்தில் கடனை திரும்பச் செலுத்த வாடிக்கையாளர்களை வற்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள போதிலும், அதனை எந்த நுண்கடன் நிறுவனங்களும் பின்பற்றுவதில்லை.

நுண்கடன் நிறுவன அதிகாரிகள் தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டு வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வற்புறுத்துவதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி முன்னதாரணமாக விளங்குகிறது வளர் பரஸ்பர உதவி அறக்கட்டளை நிறுவனம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 கிளைகளை அமைத்து சுமார் 20,000 பெண்களுக்கு கடன் வழங்கியுள்ள நிறுவனம்,ரூ.70 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை வழங்கி வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறையில் 2000 வாடிக்கையாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் 100 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

வாங்கிய பணத்தை உடனடியாக கட்டியே தீரவேண்டும் என்று வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு மத்தியில் அவர்களது பொருளாதார தேவைகளை புரிந்து கொண்டு நிவாரணம் வழங்கிய நுண்கடன் நிறுவனத்தை பெண்கள் பாராட்டிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News