3 மாதத்திற்கு ஒரு முறை மக்கள் சந்திப்பு : பூம்புகார் திமுக வேட்பாளர் உறுதி

3 மாதத்திற்கு ஒரு முறை மக்களை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பேன் என்று திமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.

Update: 2021-04-02 11:23 GMT

பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் மீனவ கிராமங்களில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட காவிரிப்பூம்பட்டினம், வானகிரி, பூம்புகார் மீனவ கிராமங்கள் மற்றும் தருமகுளம், மேலையூர், கீழையூர், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், வழி நெடுகிலும் மேளதாளம் முழக்கத்துடன் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை திமுக கூட்டணி கட்சியினர் வழங்கினர். கடந்த திமுக ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், கிராம மக்களிடம் பேசும்பொழுது உங்களால் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால்  மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து முடிப்பேன் என்று வாக்குறுதியளித்தார்.

இதில், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சசிகுமார், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் கூட்டணி கட்சி விடுதலைசிறுத்தை கட்சி, நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டவாறு சென்றனர்.

Tags:    

Similar News