மழையால் பயிர்கள் சேதம்: எம்எல்ஏ, வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை மயிலாடுதுறை எம்.எல்.ஏ மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-01-03 01:00 GMT

மழையால் சேதமடைந்த பயிர்களை, வேளாண் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்த மழையல் அறுவடை செய்ய வேண்டிய பல்லாயிரக்கணக்கான சம்பா தாளடி பயிர்கள்,  வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை தாலுக்கா வில்லியநல்லூர், உச்சிதமங்கலம் மேலாநல்லூர், வரகடை, ஐவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கருக்குமேல் 3 தினங்களில் அறுவடைசெய்ய வேண்டிய நிலையில் உள்ள பயிர்கள் சேதமடைந்து பதராக மாறியுள்ளது.

இந்நிலையில்,  பயிர்ச்சேதங்கள் குறித்து மயிலாடுதுறை வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் சங்கரநாராயணன் தலைமையில் நேரிடையாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வில்லியநல்லூர், உச்சிதமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில், அதிகாரிகளுடன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பயிர்ச்சேதங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, நிலத்தில் சாய்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களை விவசாயிகள் எடுத்து காண்பித்து, விவசாயிகள் கண்ணீர் விட்டனர். உரியமுறையில் கணக்கீடு செய்து,  தமிழக அரசிடமிருந்து இழப்பீட்டு தொகை பெற்றுத்தர கோரிக்கை விடுத்தனர். தற்போது வரை 1600 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நடப்பு ஆண்டில் கனமழையால் விவசாயிகள் தொடர்பாதிப்பிற்குள்ளானது குறித்து,  வருகிற சட்டமன்ற கூட்டதொடரில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News