தொடர் மழை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரிகளாக மாறிய விவசாய விளை நிலங்கள்

தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்கள் ஏரிகளாக மாறி இருப்பது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-11-30 03:00 GMT
ஏரி போல் மாறிய விளைநிலங்களில் மூழ்கிய நெற்பயிர்களை கையில் எடுத்து காட்டும் விவசாயிகள்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக கனமழை பெய்து வருகிறது, மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த 24மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 77.33 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழையால் பல்லாயிரக்கனக்கான ஏக்கர் விளைநிலங்கள் மழைவெள்ளநீரால் சூழப்பட்டு சம்பா தாளடி பயிர்கள் மூழ்கியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் , ராதாநல்லூர் , பொன்வாசநல்லூர் கீழமருதாநல்லூர், வில்லியநல்லூர், மாப்படுகை, பொன்னூர், பாண்டூர் ஆக்கூர், சேத்தூர் நல்லாடை விளாகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா தாளடி பயிர்கள் கனமழையால் தண்ணீர் வடிய வழியின்றி நீரில் மூழ்கியுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் பல்வேறு இடங்களில் முறையாக தூர்வாரப்படாததால் விளைநிலங்களில் தண்ணீர்; வடியாமல் தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் வாய்கால்களும் விளைநிலங்களிலும் சரிமட்ட அளவில் உள்ளதை காணமுடிகிறது. தண்ணீர் இதனால் பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் ஏரிபோல் காட்சியளிக்கிறது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து 3வது முறையாக விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் இரண்டு முறை பாதிக்கப்பட்டு பயிர்கள் சேதமடைந்த நிலையில் விவசாயிகள் எஞ்சிய பயிர்களை அடிஉரம் இட்டு காப்பாற்றினாலும் தற்போது மீண்டும் கனமழையால் நடவு செய்யப்பட்ட பயிர்கள், 40 நாட்களுக்கு மேல் உள்ள சம்பா தாளடி பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் தண்ணீர் வடிந்தாலும் மகசூல் இழப்பு ஏற்படும் என்றும் ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்கி விவசாயிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News