பாஜக வெற்றிக்கு வாக்குப்பதிவு இயந்திரமே காரணம் : காங்கிரஸ் எம்.பி சொல்றார்..!

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு இவிஎம் மிஷினே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.,செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-12-11 09:50 GMT

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார்.

சோழவந்தான் :

மதுரை சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார், அதன்  பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது :-

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு மின்னணு எந்திரங்கள்தான் காரணமாகும்.  காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பொதுமக்கள்பார்க்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பும் சரி பின்பும் சரி அரசை ஆதரிக்கின்ற ஊடகங்களும் பத்திரிகைகளும் மற்றும் அனைத்து விதமான கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே அமோகமாக வெற்றி பெறும் என்று தான் தெரிவித்திருந்தது ஆனால் மக்களுடைய அந்த எண்ணத்தை இ விஎம் என்கின்ற தொழில்நுட்பம் களவாடிவிட்டது  என்பதுதான் உண்மை.   ஏனென்றால் இவிஎம் மெஷினை பொறுத்தவரை அதனை உற்பத்தி செய்கின்ற ஜப்பான் போன்ற வளர்ந்த தொழில்நுட்ப வசதிகள் படைத்த நாடுகள் கூடஇவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லாமல் வாக்குச்சீட்டு முறையில் தான் இன்றைக்கும் தேர்வு செய்கிறார்கள்.

அப்படி இருக்கின்ற போது இந்தியாவில் ஏன் இப்படி என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். தேர்தல் கமிஷனே நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான இவிஎம் மெஷின்களை காணவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளது. அந்த மிஷின்கள் எங்கே போனது? பாரதிய  ஜனதா கட்சியின் முன்னணித்  தலைவரான சுப்ரமணிய சாமியே இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார். இவிஎம் மிஷின் தான் இன்று பாஜகவை  வெற்றி பெற வைத்திருக்கிறது

வரக்கூடிய தேர்தலில் இவிஎம் மெஷின் வேண்டாம் என்பதுதான் எங்கள் கருத்து. இந்தியா கூட்டணியில் தற்போதுள்ள முரண்பாடுகள் குறித்த கேள்விக்கு எங்களது கூட்டணி கட்சிகளில்  சிலவற்றில் மாற்று கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் எங்களின் நோக்கம் பாசிச பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்த வேண்டும். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்ற பாஜ அரசை தேர்தலிலே தோற்கடிப்பது தான் எல்லாருடைய எண்ணமும். அதில் சில கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால்  அது பேசி தீர்க்கப்படும்

திரிணமுல் கட்சியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு

தூக்குக் கயிறை முத்தமிடுகின்ற குற்றவாளிக்கு கூட தனது இறுதிக் கருத்தை சொல்லுகிற உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால், தொழில் அதிபர் ஒருவர் கடிதம் மூலமாக ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். அந்த தொழிலதிபரை குற்றம் சாட்டப்பட்டவர் நேரடியாக நான் விசாரிக்க வேண்டும் என்று பாராளுமன்ற நிலை குழுவில் கேட்கிறார். ஆனால் அந்த வாய்ப்பும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் விவாதம் வந்தபோது அவருடைய கருத்தை சொல்லும் வாய்ப்பும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. அந்த  எம் பி க்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது

பாஜகவுடன் திமுக நெருங்கி வருவது பற்றிய கேள்விக்கு,

யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை  என்று கூறினார். இந்த பேட்டியின்போது  பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் மற்றும் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News