அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் நலன் கருதி சனிக்கிழமை பத்திரப்பதிவு
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த சார்பாதிவாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளில் ஆவணம் பதிவு செய்யும் பணியினை,வணிகவரிமற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் நலன் கருதி சனிக்கிழமைகளில் ஆவணம் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த சார்பாதிவாளர் அலுவலகத்தில், அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் நலன் கருதி சனிக்கிழமைகளில் ஆவணம் பதிவு செய்யும் பணியினை,வணிகவரிமற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 4 மாத காலம் கொரோனா காலகட்டமாகவும் 1 மாத காலம் வடகிழக்கு பருவமழை காலமாகவும் 2 மாத காலம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 9மாவட்டங்களில் 1 மாத காலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற காலமாகவும் இருந்தது.
இவ்வகையான பல்வேறு பணிகளுக்கு இடையில் தமிழகத்தில் வரக்கூடிய அரசின் மொத்த வருவாயில் 87 சதவிகிதம் வருவாய் பதிவுத்துறையின் மூலம் ஈட்டப்பட்டுள்ளது. வருவாய் ஈட்டும் துறையாக பதிவுத்துறையும் வணிகவரித்துறையும் இயங்கிக்கொண்டு உள்ளது.பத்திர பதிவுத்துறையின் மூலமாக அரசுக்கு 13 ஆயிரத்து 270 கோடி ரூபாயும் வணிகவரித் துறையின் மூலமாக 1 இலட்சத்து 49 ஆயிரத்து 70 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்டி தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், இத்துறைகளின் மூலம் இன்னும் 900 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் எனத் தெரிவித்தார். அதற்காக, இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையெல்லாம் சீர்திருத்தம் செய்து கொண்டு வருகின்றோம்.தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அரசு மற்றும தனியார் துறை அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் நலன் கருதி சனிக்கிழமையிலும் ஆவணம் பதிவு செய்யும் பணியையும் இன்றைய தினம் துவக்கி வைத்துள்ளோம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலான சட்டமுன்வடிவை ஆளுநர் ஒப்புதல் பெற்று, மேதகு இந்திய குடியரசு தலைவர், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகளையெல்லாம் , இந்திய குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் உடனடியாக முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பத்திரப்பதிவுத்துறை 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான துறையாகும்.
இத்துறை ஏறத்தாழ 150 காலத்தை கடந்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 576 பத்திரப்பதிவுத்துறை கட்டிடங்களில் 100 கட்டிடங்கள் பழமையான கட்டிடமாகும்.இந்த 100 பழமையான பதிவுத்துறை கட்டிடங்களில் 50 கட்டிடங்களைபுதிதாக கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இக்கட்டிடங்களில், மக்கள் எளிதாக வந்து பதிவு செய்து கொள்ளும் நோக்கோடு அவர்களுக்கென்று ஒரு தனி அறை பதிவு செய்யும் அறையாக உருவாக்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி புதிதாக 20 ஆயிரம் ஆவண எழுத்தர்களை எழுத்துத் தேர்வின் மூலம் நியமனம் செய்வதற்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பத்திரப்பதிவுத்துறையில் பதிவுசெய்து கொள்வது பற்றியும் அரசு எவ்வகையான திட்டங்களை பதிவுத்துறையில் செயல்படுத்தி வருகின்றது என்பது பற்றியும் தினந்தோறும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் நலன்கருதி, வசிக்கும் பகுதிகளிலேயே பதிவு செய்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நில மோசடி சம்பந்தமான பிரச்னைகளுக்கு மேதகு இந்திய குடியரசு தலைவர், ஒப்புதல் பெற்றவுடன் நிலத்திற்கு சொந்தக்காரர் யார் என்பதை அறிந்து அவர்களிடமே நிலம் ஒப்படைக்கப்படும். மேலும், பதிவுத்துறையில் சனிக்கிழமைகளில் பணியாற்றும் அலுவலர்கள் அவர்களுக்கு தேவைப்படும் வாரத்திலோ அல்லது மாத இறுதியிலோ ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளாம் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்ஆ.வெங்கடேசன்,பத்திரப்பதிவுத்துறை துணைத்தலைவர் சிவனருள் , உதவிப்பதிவுத்துறைத் தலைவர்மதுரை (வடக்கு) இரா.இரவீந்திரநாத், மாவட்டஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.