மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது

ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி பகுதிகளில் வீடுகளை உடைத்து சுமார் 77 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் கைது

Update: 2022-05-16 16:11 GMT

மதுரை கொள்ளை சம்பவத்தில் கைதான கொள்ளையர்கள்

மதுரை மாவட்டத்தில் தாக்கல் ஆகும் குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சமீபத்தில் ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளை உடைத்து சுமார் 77 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கு சம்பந்தமாக, கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களை உடனடியாக, கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர்  இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன் ஆகியோரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து 77 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரண்டு சக்கர வாகனம் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இருவரும், இவ்வழக்கில் மட்டுமல்லாது, அன்றைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், மணிகண்டன் என்பவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இவ்வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்த தனிப்படையினரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார். இதேபோல், மதுரை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News