புதிய வழித்தடங்களில் பஸ் வசதி: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் புதிய தடங்களில் அமைச்சர் மூர்த்தி பஸ்களை இயக்கி வைத்தார்;
கிராம மக்கள் பயன் பெறுகின்ற வகையில் 3 புதிய வழித்தடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கடி, இளமனூர் மற்றும் களஞ்சியம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறுகின்ற வகையில் 3 வழித்தடங்களில் அரசு பேருந்துகளை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்றாக போக்குவரத்து உள்ளது. ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்லவும்இ மாணவ மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் பொதுப் போக்குவரத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர், அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்குடி, இளமனூர் மற்றும் களஞ்சியம் நகர் ஆகிய 3 கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி வேண்டி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.,அதனடிப்படையில், எம்.ஜி.ஆர். நிலையம் – சக்குடி (ஒத்தக்கடை காளிகாப்பான் வரிச்சூர் மற்றும் களிமங்கலம் வழியாக) பெரியார் பேருந்து நிலையம் – இளமனூர் (தெற்குவாசல் கோரிப்பாளையம் கருப்பாயூரணி மற்றும் ஆண்டார்கொட்டாரம் வழியாக)
பெரியார் பேருந்து நிலையம் - களஞ்சியம் நகர் என 3 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சக்திவேல் , மாவட்ட ஊராட்சிக்குழு த்தலைவர் சூரியகலா கலாநிதி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக அலுவலர்கள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.