கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.2.22 லட்சம் வழிப்பறி
பேரிகை அருகே, கத்தியை காட்டி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.2.22 லட்சம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா, பேரிகை வெங்கடேஷ்புரம் பக்கமுள்ள எனேக்க பீரனப்பள்ளியை சேர்ந்தவர் பரமேஷ் (25). இவர் பேரிகை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேலாளராக, கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வருகிறார். பெட்ரோல் பங்க்கில் வசூலாகும் பணத்தை வங்கியில் பரமேஷ் செலுத்துவது வழக்கம்.
அதேபோல, 2 நாட்கள் வசூல் ஆன தொகை ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்துடன் பரமேஷ், டூவீலரில் காமன்தொட்டி வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். புக்கசாகரம் - காமன்தொட்டி சாலையில்ம் சுண்டட்டி குட்டாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள், பரமேசை கத்தி முனையில் மிரட்டி, பணம் இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 270 மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர்.
இது குறித்து பேரிகை போலீசில், பரமேஷ் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பணம் பறித்ததாக புகார் கூறிய பரமேஷ் கடந்த சில மாதத்திற்கு முன்பு பண முறைகேடு செய்ததாக வேலையில் இருந்து நீக்கப்பட்டு, பிறகு மன்னிப்பு கேட்டு மீண்டும் வேலைக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது.
மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. எனவே அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.