கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல்நடவுப் பணிகள் தீவிரம்

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் குறுவை நெல்நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2021-09-01 15:15 GMT

 கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குறுவை பயிர் சாகுபடி செய்ய நாற்று நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குறுவை பயிர் சாகுபடி செய்ய நாற்று நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்ததால் சுமார் 8 ஏக்கர் வரை நெல் சாகுபடி நடந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும், வாய்க்கால்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் ஆடி 18 அன்று விதை நெல்களை வாங்கி தெளித்து நாற்றுவிடும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.

நாற்றுவிட்டு ஒரு மாதம் ஆன நிலையில் நாற்றுகளை பிடுங்கி வயல்களில் நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் போதியளவு மழையில்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் அனஅடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். நாற்றுவிட்டு 120 நாட்களுக்கு தண்ணீர் வேண்டும். தற்போதுள்ள நிலையில், குறுவை பயிர் சாகுபடிவரை தண்ணீர் வர வாய்ப்பு குறைவு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில், நாற்றுவிட்டு பயிர் சாகுபடி செய்தாலும், கரூர் மாவட்டத்தில் கிடைக்கும் மழையை நம்பி ஒரு போக சாகுபடியை எடுத்துவிடலாம் என தன்னம்பிக்கையுடன் சில விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் இந்த ஆண்டு கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சாகுபடி பரப்பளவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News