உப்பிடமங்கலம் சந்தையில் கட்டிடங்கள் பழுது: சீரமைத்தால் சிறப்பு
உப்பிடமங்கலம் சந்தையில் கட்டிடங்கள் பழுதாகி உள்ள நிலையில், அவற்றை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.;
கரூர் அருகே, உப்பிடமங்கலத்தில், பழுதடைந்த கட்டடங்களுடன் உள்ள சந்தை.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புலியூர் அருகே உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை சந்தை நடக்கிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும், வெளிமாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் உப்பிடமங்கலம் சந்தைக்கு வந்து செல்கின்றனர். மாடுகள் சந்தைக்கும் உப்பிடமங்கலம் பெயர் போனது. ஆனால், உப்பிடமங்கலம் சந்தை பேட்டையில், கடை அமைக்கும் பகுதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், சில கட்டடங்களும் பழுதடைந்துள்ளன.
இதனால், போதிய இடவசதி இல்லாமல், வியாபாரிகள் திறந்த வெளிப்பகுதியில் சாலையோரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், உப்பிட மங்கலம் சந்தைபேட்டையில், பழுதான கடைகளை சீரமைக்கவும், கூடுதலாக கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.