வளர் இளம் பருவம் பாடத்தை ஆபாசமாக நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட்

பாகநத்தம் அரசு பள்ளி ஆசிரியர் வளர்இளம் பருவம் பாடத்தை, ஆபாசமாய் நடத்திய புகாரில் தற்காலிக பணியிடை நீக்கம்.

Update: 2021-12-03 09:00 GMT

தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் பன்னீர் செல்வம்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் பாகநத்தம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் (46). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 8 ம் வகுப்பு அறிவியல் பிரிவில், வளர் இளம் பருவம் என்ற பாடத்தை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் நடத்தினாராம்.

அப்போது, மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த புகார் அடிப்படையில், கரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் மற்றும் தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் ரமணி ஆகியோர் பள்ளியில் நேரடியாக சென்று பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மாணவர்களிடம் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட பாடத்தை நடத்துவதற்காக சில பாடங்களை தவிர்த்து விட்டு வகுப்பறையில் பாடம் நடத்தியது தெரியவந்தது. மேலும் மாணவர்களுக்கு பாலியல் சம்பந்தமான கேள்விகளை தேர்வாக வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்பித்தனர். விசாரணைக்குழு அளித்த அறிக்கையின்படி மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் இன்று சம்பந்தப்பட்ட அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆபாசமாக பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Tags:    

Similar News