ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ காட்சி

சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரத்தில் கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை இன்று கன்னியாகுமரியில் காணலாம்.

Update: 2024-04-23 04:13 GMT

சூரியன் மறைவும் சந்திர உதயமும் 

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த அபூர்வ நிகழ்வு சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில் கன்னியாகுமரியில் காணலாம். 

மாலையில் சூரியன் மேற்கு பகுதியில் உள்ள அரபிக்கடலில் பந்து போன்ற வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கில் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் வட்ட வடிவத்தில் ஒளி வெள்ளத்தில் காணப்படும். இந்த காட்சியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் இருந்து கண்டு ரசிக்கலாம்.

இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது.  ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி நாளில் நிகழும் இதனை இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்கலாம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குமரியில் கூடுவது வழக்கம்.

இதையொட்டி குமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பவுர்ணமி தீபாராதனை ஆகியவை நடைபெறும். தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை நடைபெறும்.

சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி திரிவேணி சங்கமம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News