காஞ்சிபுரம்: 83 நபர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-04-30 10:00 GMT

சாலவாக்கத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலவாக்கம் ஏசியன் பள்ளியில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,   இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது:

இஸ்லாமிய சமய சட்டத்தில், பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. அதைப்போல திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு திட்டத்தை செயல்படுத்தினார். அதேபோல், பாரதி கண்ட புதுமை பெண்கள் கனவை நினைவாக்கும் வகையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய முஸ்லிம் மகளிர் 83 நபர்களுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 10 நபர்களுக்கு சுமார் ரூ.47 ஆயிரம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

நீண்ட காலமாக, பழுதடைந்துள்ள பள்ளிவாசலுக்கு, பராமரிப்பு பணிகளுக்காக 70 பள்ளிவாசல்களுக்கு, ரூ.6 கோடி சட்டமன்ற மானிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, சமுதாய மக்கள் சார்பாகவும், ஜமாத் சார்பாகவும், அந்த பள்ளிவாசலுடைய நிர்வாகிகள் சார்பாகவும், இந்த கூட்டத்தின் வாயிலாக, நன்றி தெரிவித்துள்ளனர்.

அதே போன்று கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காகவும், இந்த ஆண்டு செல்லுகின்ற விருப்பமுள்ளவர்கள், 3754 நபர்கள், விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில், 1498 நபர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு மானியம் வழங்கப்படவுள்ளது.

மக்களுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கு தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு நல்கி அரசாங்கம் நலத்திட்ட உதவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் .செஞ்சி கே.எஸ். மஸ்தான் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News