அமைச்சர் அன்பரசன் தாயார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
நேற்று மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாயார் ராஜாமணி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.;
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனின் தாயார் ராஜாமணி அம்மாள் (வயது 83) நேற்று இரவு 10.00 மணியளவில் காலமானார்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் தா.மோகலிங்கம் அவர்களின் மனைவி ஆவார். மறைந்த ராஜாமணி அம்மாளுக்கு தா.மோ.அன்பரசன் - தா.மோ.எழிலரசன் ஆகிய இரு மகன்களும், கனிமொழி, பவானி, கண்மணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குன்றத்தூருக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.