மாங்காடு கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 39 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு…

மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 39 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.

Update: 2022-11-14 16:30 GMT

தங்க ஆபரணங்களை SBI வங்கியிடம் ஒப்படைக்கும் அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பரசன்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற தங்கத்தில், திருக்கோயிலுக்குத் தேவைப்படுவது நீங்கலாக, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதில் இருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அந்தப் பணிகளை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதும் 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது. இதேபோல மற்ற இரண்டு மண்டலங்களுக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட தங்கம் சுத்த தங்கமாக மாற்றப்பட்டு தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கத்தை கணக்கிடும் பணியானது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில் நடைபெற்றது.

அதன்படி, கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், பக்தர்கள் வழங்கிய காணிக்கையில், திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற தங்கத்தை சுத்தம்படுத்தி சொக்கத்தங்கமாக மாற்றப்பட்டது. அவ்வாறு, மாற்றப்பட்ட 39 கிலோ 704 கிராம் சுத்தமான தங்கம் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியின் அம்பத்தூர் மண்டல மேலாளர் ராஜலட்சுமியிடம் இன்று வழங்கினர்.

நிகழ்ச்சியில், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன், இணை ஆணையர் செந்தில் வேலவன், திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News