சங்கராபுரத்தில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

சங்கராபுரம் அருகே சித்தேரி பகுதியில் உள்ள ஒரு குளத்தின் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி

Update: 2021-09-07 16:21 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து பாடி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெகதீஷ்வரன் (வயது 10). அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசனின் மகன் கார்த்திக் (10). இந்த 2 மாணவர்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது ஆன்லைன் வகுப்பு நடந்து வருவதால், பாடத்தில் சந்தேகம் கேட்பதற்காக 2 மாணவர்களும் பள்ளிக்கு அடிக்கடி சென்றுவந்தனர்.

நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்ட போது, அவர்கள் 2 மாணவர்களும் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். பதறிபோன பெற்றோர்கள் இரவு முழுவதும் தேடி பார்த்தும் 2 மாணவர்களும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே சித்தேரி பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே ஒரு சைக்கிள் மற்றும் மாயமான மாணவனின் செருப்பு கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பெற்றோர் சங்கராபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி தேடிய போது கார்த்திக், ஜெகதீஷ்வரன் ஆகியோர் உடல்களை இறந்த நிலையில் மீட்டனர்.

இறந்த மாணவர்களின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News