கனமழை எதிரொலி: 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Update: 2023-11-15 03:57 GMT

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். 

கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.806 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கூடுதலாக உபரி நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளது.

மேலும் தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்தி்ல் 5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது.

நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பு அதிகரிக்கும். உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது.

சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News