உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு!..தீயணைப்பு வீரர்கள் மீட்பு
மின்கோபுரத்தில் திடீரென ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உயர அழுத்த மின்கோபுரத்தில் ஏறி அந்த நபரை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.;
ஈரோடு : மின்கோபுரத்தில் திடீரென ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உயர அழுத்த மின்கோபுரத்தில் ஏறி அந்த நபரை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம், தனியார் கல்லூரி அருகே 60 அடி உயர அழுத்த மின்கோபுரம் உள்ளது. நேற்று மதியம் அந்த மின்கோபுரத்தில் திடீரென ஒரு நபர் ஏறினார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி ரங்கராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்றனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உயர அழுத்த மின்கோபுரத்தில் ஏறி அந்த நபரை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (வயது 33) என்பதும், கடந்த 1 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர், தன்னை யாரோ துரத்துவதாக கூறி உயர அழுத்த மின்கோபுரத்தில் ஏறியதும் தெரியவந்தது.
இதனிடையே கருப்புசாமியின் குடும்பத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.இதையடுத்து கருப்புசாமியை தீயணைப்பு வீரர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.