ரத்த தானம் செய்வதாக சொல்லி பணம் பறிக்கும் நபர்கள்
ரத்த தானம் பெயரில் மோசடி, பணம் பெற்று அதனை நிராகரித்தவர்கள் மீது போலீசில் புகார்;
ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனுவில், அவர்களது கூட்டமைப்பு அவசரகால சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்து வருவதாகவும், இதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ் ஆப் குழு தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்தக் குழுவில் ரத்தம் தேவைப்படுவதாகப் பதிவு செய்தவர்களின் கைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொண்ட இரண்டு பேர், தங்களை தன்னார்வலர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ரத்தம் கொடுக்க வருவதற்கு போக்குவரத்து செலவுக்காக என்று கூறி ஆன்லைன் மூலமாக பணம் பெற்றுக்கொண்டு, ரத்த தானம் செய்யாமல் மோசடி செய்வதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாவதால், இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரத்தக் கொடையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.