சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி. திட்டத்திற்கு ஆய்வு: அமைச்சர் முத்துசாமி விளக்கம்

'சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு'வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்;

Update: 2025-03-13 04:10 GMT

சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு" - வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்

ஈரோடு: பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (சி.இ.டி.பி.) அமைப்பது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி வழக்கமான மழுப்பல் பதிலளித்துள்ளார். "ஏற்கனவே இரண்டு, மூன்று விதமாக திட்டமிட்டும், அவை ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. அந்த ஆய்வின் முடிவுகள் கிடைத்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

ஈரோடு, அகில்மேடு வீதியில் உள்ள தனியார் கட்டடத்தில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. எம்.எல்.ஏ. சந்திரகுமார் நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் பேசினார்.

பெருந்துறை சிப்காட்டில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது 56 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். "சட்டப்பூர்வமான மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் கோரிக்கைப்படி டி.டி.எஸ். மீட்டர் இரண்டு இடங்களில் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது," என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் ஏற்கனவே இருந்த காந்தி சிலையை வெண்கல சிலையாக மாற்றி, சாலை ஓரமாக அமைக்கப்பட்டதையும் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ஈரோடு, சூரம்பட்டி நான்கு ரோடு அருகே உள்ள கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தைப் பயன்படுத்திய முன்னாள் அரசியல்வாதிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். என்.கே.கே. பெரியசாமி மற்றும் என்.கே.கே.பி. ராஜா ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுங்கியதும், 2021-ல் திருமகன் ஈவெரா மற்றும் 2023-ல் இளங்கோவன் ஆகியோர் உடல்நலக்குறைவால் இறந்ததும் இதற்கு உதாரணம். இதனால் 'செண்டிமெண்ட்' காரணமாக தற்போதைய எம்.எல்.ஏ. சந்திரகுமார், அந்த அலுவலகத்துக்குச் செல்லாமல் தனியார் வாடகை கட்டடத்தில் புதிய அலுவலகம் திறந்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர் முத்துசாமி குறுக்கிட்டு, "அதுபற்றி இப்போது பேச வேண்டாம். நாளை ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்னர் விவரங்கள் தெரிவிக்கப்படும்," என்று கூறினார்.

Tags:    

Similar News