ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் புதிய கட்டிடப்பணிகளை, வீட்டு அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.

Update: 2021-06-04 09:43 GMT

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு, கொரோனா பரிசோதனை (SWABTest)  பிரிவு, நோயாளிகளுடன் வருகை தரும் நபர்கள் காத்திருக்கும் அறைகள் மற்றும் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடப் பணிகளை, தமிழ்க வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இன்று  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 932 எண்ணிக்கையிலான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில், தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மாற்று பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கட்டிடம் அமைக்கும் பணி நேற்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலே SWAB Test  எடுக்கும்; பரிசோதனை பிரிவு அமைக்கப்பட உள்ளது.

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 932 படுக்கைகளும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 608 படுக்கைகளும் மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, அந்தியூர் அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை என 2,073 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இதில் கொரோனா நோயாளிகளுக்கு 1691 படுக்கைள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆக்ஸிஜன் படுக்கைகளில் 998 நபர்களும், ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகளில் 260 நபர்களும், தீவிர சிகிச்சை பிரிவில் (ICUPatients) 130 நபர்களும் என 1388 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் 303 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகத்  தெரிவித்தார்.

Tags:    

Similar News