ஈரோடு மாநகரில் பரவலான மழை, மக்கள் ஆறுதல்

பெருந்துறையில் கனமழை, புழுக்கம் மற்றும் வெப்பம் தணிவு;

Update: 2025-03-12 03:50 GMT

மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல் - வெப்பத்தின் தாக்கம் குறைந்தது

ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததால், வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஈரோடு மாநகரில் கடந்த மாத இறுதியிலிருந்தே வெயில் சுட்டெரிக்க தொடங்கியிருந்தது. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். அதிக வெப்பத்தின் காரணமாக நண்பகல் 12:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பெரும்பாலான மக்கள் வெளியில் நடமாடுவதையே தவிர்த்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், வெயிலின் தாக்கமும் சற்று குறைந்திருந்தது. ஆனால் அதிகப்படியான ஈரப்பதத்தால் புழுக்கமாக இருந்ததால் மக்கள் வியர்வையில் நனைந்தனர். இந்த நிலையில் மதியம் 3:00 மணியளவில் லேசான சாரல் மழை தொடங்கி, படிப்படியாக வேகம் அதிகரித்தது. மாலை 4:40 மணிக்குப் பின் பரவலாக, சற்று கனமழையாகக் கொட்டியது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. இதனால் மாநகரின் பிரதான சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வீரப்பன்சத்திரம், ஆர்.கே.வி. சாலை, சென்னிமலை சாலைகளில் குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். எனினும், மழையால் கடும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான சூழல் நிலவியதால், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4:00 மணியளவில் பலத்த இடியுடன் தூறல் மழை ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. அந்தியூரிலும் மாலை 4:00 மணிக்குத் தொடங்கிய மிதமான மழை 4:20 மணி வரை நீடித்தது. இதேபோன்று தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், மூலக்கடை, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லட்சுமிநகர், காளிங்கராயன்பாளையம், மூலப்பாளையம், காடையம்பட்டி, தொட்டிபாளையம் ஆகிய இடங்களில் மாலையில் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் காலை முதல் மதியம் வரை லேசான வெயில் அடித்த நிலையில், மாலை 4:15 மணிக்கு மழை தொடங்கி 5 நிமிடம் பெய்து நின்றது. பின்னர் 5:20 மணிக்கு மீண்டும் தொடங்கி 5:35 மணிக்கு நின்றது. இந்த மழைக்குப் பின் புழுக்கம் அதிகரித்ததால் மக்கள் அவதிப்பட்டனர். ஆசனூர் பகுதியில் மாலை 4:00 மணிக்குத் தொடங்கிய சாரல் மழை மாலை வரை நீடித்தது.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை 4:00 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. வெகு நேரம் பெய்யும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், வெறும் 5 நிமிடத்திலேயே நின்றுவிட்டது. எனினும், குளிர்காற்று வீசியதால் புழுக்கமில்லாத நிலை ஏற்பட்டது. புன்செய் புளியம்பட்டியிலும் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் குறைந்தது. பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 4:00 மணிக்குத் தொடங்கிய கனமழை 4:35 மணி வரை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் மேட்டூர்-பவானி சாலையில் ஊமாரெட்டியூர் பிரிவு அருகே ஒரு பெரிய புளியமரம் வேருடன் பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்நேரத்தில் எந்த வாகனமும் அவ்வழியே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தச் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, நீண்ட நாட்களாக கொளுத்திய கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த இந்த மழை மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களுக்கு நிம்மதியையும் குளிர்ச்சியையும் அளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News