பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.

Update: 2021-11-25 06:15 GMT
வனத்துறை அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலையை சேர்ந்தவர் பொண்ணான் (வயது 58). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் தட்டக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ளது. அதில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் அடிக்கடி தோட்டத்துக்குள் நுழைந்து கிழங்குகளை தின்று நாசம் செய்ததால் பொண்ணான் நேற்று மாலை தோட்டத்தில் காவலுக்கு இருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி பொண்ணானின் தோட்டத்துக்குள் புகுந்து மரவள்ளிக் கிழங்குகளை தின்றது. இதைப்பார்த்து ஆவேசமடைந்த பொண்ணான் அருகே இருந்த கட்டையை எடுத்து காட்டுப்பன்றியை அடித்துள்ளார். இதில் அதே இடத்தில் காட்டுப்பன்றி இறந்து விட்டது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தட்டக்கரை வனச்சரகர் பழனிச்சாமி தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து வந்தார்கள்.

அவர்கள் காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை பார்த்து பொண்ணானிடம் விசாரித்தபோது, அவர் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதையடுத்து வனத்துறையினர் பொண்ணானை கைது செய்தார்கள். மேலும் இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்கள். அவருடைய உத்தரவின்பேரில் பொண்ணானுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News