16.5 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்பல்வேறு கடைகளுக்கு அபராதம்..!
ஈரோடு மாநகராட்சியில், 16.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு, ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு மாநகராட்சியில், நேற்று முன்தினம் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில், 27 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளுக்கு, 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாம் நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
முதலாம் மண்டலம்
முதலாம் மண்டலத்துக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்டில் உள்ள டீ கடைகளில், சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிளாஸ்டிக் கவர், கப் 5.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாம் மண்டலம்
இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட சத்தி ரோடு, பி.பெ.அக்ரஹாரம் பகுதியில், சுகாதார ஆய்வாளர் சதீஸ் தலைமையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் கவர், 5.500 கிலோவை பறிமுதல் செய்து 7,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மூன்றாம் மண்டலம்
மூன்றாம் மண்டலத்துக்கு உட்பட்ட பழையபாளையத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், பிளாஸ்டிக் கவர் மூன்று கிலோ பறிமுதல் செய்து 4,700 ரூபாய் அபராதம் விதித்தனர்.
நான்காம் மண்டலம்
நான்காம் மண்டலத்துக்கு உட்பட்ட, கரூர் ரோட்டில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பிளாஸ்டிக் கவர் 2.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்கள் 16.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 29,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.