ஓடையில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பு

கழிவு நீர் காரணமாக, விவசாய நிலங்களில் பயிர்கள் அழிந்து, பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது;

Update: 2025-03-25 10:50 GMT

ஆலை கழிவு நீர் கலப்பு  பேரூராட்சி தலைவர் நடவடிக்கை கோரல்

ஈரோடு மாவட்டம், நசியனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் ஆலை கழிவு நீர் கலப்பதற்கான புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நசியனுார் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா (தி.மு.க.) ஈரோடு எஸ்.பி. ஜவகரிடம் மனு வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மனுவில், சிப்காட் வளாகத்தில் செயல்படும் ஆர்.கே. ஸ்டீல்ஸ் நிறுவனம், அதன் உரிமையாளர் அபிஷேக் தலைமையில், சட்டவிரோதமாக ஆலை கழிவு நீரை ஓடையில் கலக்க செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலை கழிவு நீர் காரணமாக, நீரின் இயல்பு முற்றிலும் மாசடைந்து, விவசாய நிலங்களில் பயிர்கள் அழிந்து, பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆர்.கே. ஸ்டீல்ஸ் உரிமையாளர் அபிஷேக், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இதற்கு முன்பும் பல முறை இதே மாதிரியான சட்டவிரோத செயல்களைச் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, முன்னாள் மாவட்ட கலெக்டர் இந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தாலும், மீண்டும் இது போன்ற செயல்கள் தொடர்வதால், உரிமையாளருக்கு எதிராக கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், நசியனுார் பேரூராட்சியின் அனைத்து 15 வார்டு கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக இந்த நிறுவனத்துக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News