நீண்ட நாட்களுக்கு பிறகு மது பார்கள் திறப்பால் குடிமகன்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை, டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே இதுவரை செலுத்தியுள்ளனர்.

Update: 2021-11-02 06:15 GMT

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பார்.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மது பார்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் மது கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் பார்கள் திறக்கப்படவில்லை. இதனால் மது பானங்களையும் வாங்கும் குடிமகன்கள் ரோட்டோரம் அமர்ந்து மதுபானங்களை குடித்து வந்தனர். இதனால் பொதுமக்கள் பெண்கள் சில நேரம் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டுமென பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் வாழ்வாதாரம் காக்க பார்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு இன்று முதல் பார்களை திறக்க அனுமதி அளித்திருந்தது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 213 டாஸ்மாக் கடைகளில் 118 கடைகளில் பார்கள் இயங்கி வருகின்றன. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பார்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிவரை ஏல ஒப்பந்தத்தை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே இதுவரை செலுத்தியுள்ளனர். இதனால் இன்று 34 பார்கள் திறக்கப்பட்டன. அரசு பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி பார்களுக்கு வரும் குடிமகன்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் ஆறடி இடைவெளிக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. குடிமகன்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மது பார்களை பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்கள் திறந்திருக்கும் என அதிகாரிகள் கூறினர். நீண்ட இடைவேளைக்கு பிறகு பாருங்கள் பிறந்திருப்பதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் குடிமகன்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News