பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-06-18 04:23 GMT

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ‌3 நாட்களுக்கு முன் அணைக்கு வரும் நீர்வரத்து 2667 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10178 கன அடி அதிகரித்துள்ளது.

பவானி அணையின் நீர்மட்டம் ‌90 அடியை மீண்டும் எட்டியுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.98 அடியாகவும், நீர் இருப்பு 22.2 டி.எம்.சி-யாகவும், நீர்வரத்து வினாடிக்கு 10178 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு 800 கனஅடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி நீர் என மொத்தம் ‌1000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News