சத்தியமங்கலம் அருகே நகராட்சி பொறியாளரை கண்டித்து கடையடைப்பு

புன்செய் புளியம்பட்டியில், நகராட்சி பொறியாளரை கண்டித்து, வியாபாரிகள் கடைகளை அடைத்து, முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-19 09:43 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பு.புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக 120 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு ரூ.10,000 முதல் 18,000 வரை நகராட்சி நிர்வாகம் வாடகை வசூல் செய்து வருகின்றது.

கடந்த 2 மாதமாக,  கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அந்த இரண்டு மாத வாடகையை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்து தரக்கோரி மனு அளிப்பதற்காக,  நகராட்சி கடைகளின் குத்தகைகாரர் மற்றும் சங்க பிரதிநிதிகள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று உள்ளனர்.

அப்போது,  நகராட்சி பொறியாளர் பழனிச்சாமி வாடகையை கண்டிப்பாக செலுத்த வேண்டும் எனக் கூறியதுடன் அவர்களை அவமரியாதையாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நகராட்சி பொறியாளரின் செயலை கண்டிக்கும் விதமாக இன்று காலை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தையும் வியாபாரிகள் அடைத்து தங்களது எதிர்ப்பை காட்டினர்.

மேலும் சுமார்,  ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி பொறியாளர் பழனிச்சாமி, கடைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்டததையடுத்து, சமாதானமடைந்த வியாபாரிகள் தங்களது கடைகளை மதியத்திற்கு மேல் மீண்டும் திறந்து வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News