பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,849 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5849 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2021-09-14 04:00 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும்.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானி சாகர் அணை கடந்த சில நாட்களாக 102 அடியில் தொடர்ந்து இருந்து வருகிறது.

அணையின் விதிப்படி 102 அடி நிரம்பியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட வேண்டும். அதன்படி பவானி ஆற்றுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 849 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு 200 கன அடியும், காளிங்கராயன் பாசத்திற்கு 486 கன அடியும், பவானி ஆற்றுக்கு 5114 கன அடி என மொத்தம் 5800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News