சாலையை கடக்கும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்

பவானிசாகர் அணை பூங்கா அருகே பகல் நேரத்தில் சாலையைக் கடக்கும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-04-10 11:45 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் அதிகளவில் காணப்படுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள பாலத்தை கடந்து சென்றது.

இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகினர். தற்போது கோடைகாலம் என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி சாலையோரம் நடமாடும் எனவும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டும் எனவும் பவானிசாகர் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News