மூன்று நாட்களில் அதிமுக தேர்தல் அறிக்கை
இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவே வியக்கும் அளவில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் பண்ணாரியை கழக நிர்வாகிகளுக்கு அறிமுகப் படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்டவற்றை தேர்தலுக்கு முன்பே ரத்து செய்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கு ஆயிரம் வழங்குவோம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நம் முதல்வர் அடுத்த நாளே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 1500 வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இன்னும் மூன்றே நாட்களில் இந்தியாவே வியக்கும் வண்ணம் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகர செயலாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர்கள் வி.சி.வரதராஜ், மாரப்பன் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.