காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு

Update: 2021-01-16 12:15 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட அட்டணை கிராமத்திலுள்ள சடையப்பன் என்பவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. இத்தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இத்தோட்டத்தினை பாதுகாப்பதற்காக இரவு காவலுக்காக பெரியசாமி (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் பெரியசாமி காவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று பெரியசாமியை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரியசாமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த விவசாயி சடையப்பனையும் காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடம்பூர் காவல்துறையினர் யானை தாக்கியதில் உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யானை தாக்கியதில் படுகாயமடைந்த சடையப்பனையும் மருத்துவ சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கடம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News