பவானி லட்சுமி நகர் மருந்துக்கடையில் தீ விபத்து: பரபரப்பு
பவானி, லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள மருந்துக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.;
லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள மெடிக்கல் சென்டரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட லட்சுமி நகர் பஸ் ஸ்டாப் பகுதியில், மருந்தகம் ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர் பாபு. வழக்கம் போல், இரவு தனது கடையை பதினோரு மணிக்கு பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.
அதைத் தொடர்ந்து, இரவு 12 மணி அளவில் கடையிலிருந்து புகையும் தீயும் வருவதாக அக்கம்பக்கத்தினர் பவானி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். எரிந்து கொண்டிருந்த மருந்து கடையின் தீயை, பல மணி நேரம் போராடி அணைத்தனர். இரவு நேரம் என்பதால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது. இது, லட்சுமி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.