கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் காட்டெருமை தவறி விழுந்து பலி

திண்டுக்கல் அருகே கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து பலியானது.

Update: 2021-08-02 11:04 GMT

பள்ளத்தில் விழுந்து பலியான காட்டெருமை.

சர்வதேச சுற்றுலா தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் கோம்பைக்காடு அருகே கடம்பன்ரேவு பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது.

தகவலறிந்த பெரும்பள்ளம் வனவர் விவேகானந்தன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காட்டெருமையின் உடலை பரிசோதனை செய்தனர். அது சுமார் 15 வயதுடைய ஆண் காட்டெருமை என்றும், 2 காட்டெருமைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கால்நடை உதவி இயக்குனர் கூறினார். பின்னர் காட்டெருமையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Tags:    

Similar News