பழனி அருகே இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில்

ஆயக்குடி போலீசார் மோதியவர்கள் குறித்த விபரங்களை எப்ஃ.ஐ.ஆரில் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-09-04 13:30 GMT

பழனி அருகே கணக்கன்பட்டியில் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கன்பட்டியில் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கணக்கம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.கூலி வேலை செய்து குடும்பம் நடத்திவரும் பழனிச்சாமி நேற்றுமுன்தினம் இரவு 8மணியளவில் கணக்கன்பட்டியில் சாலையில், நடந்து சென்ற போது இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று பழனிச்சாமியின் உடலை சாலையில் வைத்து 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது : பழனிச்சாமி மீது மோதிய வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததாகவும், வாகன எண் முதல் கொண்டு வாகனத்தில் வந்தவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவித்தும், ஆயக்குடி போலீசார் மோதியவர்கள் குறித்த விபரங்களை எப்ஃ.ஐ.ஆரில் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியவர்களை காப்பாற்றும் நோக்கத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி செயல்படுவதாகவும்,‌வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததாகக்கூறி, மருத்துவமனையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரிடம் விசாரணை செய்தால் வாகனம் ஓட்டியவர் யார் என்பதும் தெரியும். ஆனால் போலீசார் அவர்களை விசாரிக்காமல் தவிர்ப்பதாக குற்றம் சாட்டினர். மோதியவர்கள் பெயரை சேர்த்து வழக்கில் சேர்த்து செய்து எப்ஐஆர் நகல் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான போலீசார், பழனிச்சாமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திடீர் சாலை மறியல் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது . இதையடுத்து போலீசார்  பேச்சுவார்த்தை,  அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News