ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

Update: 2021-11-23 14:00 GMT

ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் தக்காளி ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக வடகிழக்கு பருவமழை காரணமாக ஒட்டன்சத்திரம் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 10 முதல் 20 டன் வரை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தச் சந்தையில் இருந்து தக்காளி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கோவில்பட்டி, காரைக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 700 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அதாவது ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 45 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 110 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News