திண்டுக்கல் அருகே சுங்கச்சாவடியில் குட்கா- வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

கொடைரோடு சுங்கச்சாவடியில் கார் , பேருந்தில் கொண்டு சென்ற 200 கிலோ குட்கா, 13.5 கிலோ வெள்ளிக்கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-09-09 16:17 GMT

திண்டுக்கல் அருகே சுங்கச்சாவடியில்  பேருந்துகளில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசு மற்றும் குட்கா.

 

கொடைரோடு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் சுமார் 200 கிலோ குட்கா மற்றும் சேலத்திலிருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட 13.500 கிலோவெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம்,  திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை முதல் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலெட்சுமி மற்றும் நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் ஆகியோர் நெடுஞ்சாலை காவல்துறையினர் இணைந்து நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலம் மாவட்டம், தருமபுரியிலிருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்தில் முருகன் என்பவர் விற்பனைக்காக கடத்தி வந்த  சுமார் 200 கிலோ குட்கா புகையிலைப்  பொருளை பறிமுதல் செய்து, முருகனை கைது செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர், நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

அதேபோல, சேலத்தில் இருந்து மதுரைக்கு சென்ற மற்றொரு அரசு பேருந்தில், ஆந்திராவைச் சேர்ந்த மோகன் என்பவர்,  உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த சுமார் 13 கிலோ 500  கிராம் எடையுள்ள வெள்ளிக்கொலுசு, வளையல்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, விசாரணை செய்த காவல்துறையினர்,  திண்டுக்கல்லில் உள்ள மதுரை மண்டல வணிகவரி துறை அலுவலர்களிடம் கொலுசு, வளையல்களை ஒப்படைத்தனர். இந்த வாகன சோதனையில், அம்மையநாயக்கனூர் காவல் துணை ஆய்வாளர் விஜய்பாண்டியன், அமுல்ராஜ் காவலர்கள் முருகன், பிரபு மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் ஈடுபட்டனர். திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட  குட்கா மற்றும்  வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News